அதிகார மையங்களும் வலைப்பதிவுகளும் (blogs)
முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.
தகவல் தொடர்புச் சாதனங்கள்:
தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக் கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்ஃபோன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களான ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம். ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. ஊடகங்களின் அதிகாரம் இங்கேதான் செயல்படுகின்றது. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.
ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானித்து நம்மீது அதிகாரம் செலுத்துகின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதை யெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப் பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதையும் ஊடகங்களே முடிவு செய்கின்றன.
மனிதன் எழுதக் கற்றுக் கொண்டதும் எழுத்துவழித் தகவல் தொடர்பு கொள்ளத் தொடங்கியதுமான வரலாறு சில ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது என்றாலும் தகவல் தொடர்பு ஊடகங்களின் பாய்ச்சல், மனிதன் காகிதத்தில் அச்சிடக் கற்றுக் கொண்டதிலிருந்தே தொடங்குகிறது.
ஊடகங்களின் அதிகாரம்:
ஊடகங்களில் வெளிப்படும் அதிகாரம் இரண்டு நிலைகளில் செயல்படும். ஒன்று, ஊடக உடைமையாளர்கள் தகவல்கள் மீதும் தகவல் தருபவர் மீதும் அதிகாரம் செலுத்துவது. மற்றொன்று, ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் வாசகரிடம் அதிகாரம் செலுத்துவது. தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய உற்பத்திக் கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.
ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது. வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.
இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவு ஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின. கணிப்பொறி சார்ந்த னு.வு.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.
புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின. புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தும் மையங்களாயின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான ஊடக அதிகார மையங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.
II
வலைப்பதிவுகள்: (Blogs)
தகவல் தொழில்நுட்பத்தின் அதி நவீன மின்னணு ஊடகமான கணினி மற்றும் செயற்கைக் கோள்கள் இவற்றின் இணைப்பால் சாத்தியமாகும் இணையம் தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புரட்சி அத்தியாயம் என்றால் அது மிகையன்று. உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம் உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள், இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு, பல்ஊடகத் தொழில்நுட்பம், வேகம், உலகமொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல், இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (கு.வு.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை றறற என்றழைக்கப்படும் (றுழசடன றுனைந றுநடி) சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் டீடழபள ஆகும்.
வலைப்பதிவு என்பதற்கு இணைய அகராதி விக்கிபீடியா தரும் விளக்கம்,
“வலைப்பதிவு (டீடழப) என்பது அடிக்கடி இற்றைப்படுத்தப் (ரிவழனயவந) படுவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்கு படுத்தப்படுவதற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்தப் படுவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.||
என்பதாகும். மேலே விக்கிபீடியா தரும் விளக்கத்திலிருந்து வலைப்பதிவின் தனித்தன்மைகளாக இரண்டு வசதிகளைச் சிறப்பித்துச் சொல்லமுடியும். 1. அடிக்கடி இற்றைப்படுத்தப் படுவது. 2. வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பது. இந்த இரண்டு அம்சங்கள்தான் வலைப்பதிவுகளின் தனிப்பெருஞ்சிறப்புக்கள்.
வலைப்பதிவு: தம் படைப்புகளைத் தாமே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் இதனை டீடழபபiபெ என்பர். தமிழில் இது வலைப்பதிவு எனப்படும். இதனை வலைப்ப+க்கள் என்றும் சிலர் வழங்குவர். ஒருவர் தம் பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கத் தேவைப்படுவன, கொஞ்சம் கணினி அறிவு, இணையத் தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே. வலைப்பதிவுக்குப் பொருள் செலவு ஏதும் கிடையாது. இணையத்தில் இந்தச் சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தித் தமிழிலேயே ஒருவர் தம்முடைய படைப்புகளைப் பதிப்பிக்கலாம். வலைப்பதிவுகளை வேறுவிதமாகவும் விளக்கலாம். அதாவது இணையத்தின் வழி ஒரு தனிநபர் உருவாக்கும் இதழ் அல்லது நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்பு அனைவரும் படிப்பதற்கானது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வலைப்பதிவுகளில் பல்வேறு பதிவுகளைப் பதித்து வருகின்றார்கள். இதில் பலர் கணிப்பொறி, இணையத் தொழில் நுட்பம் அறியாதவர்கள். வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய எளிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் இத்தகு தொழில்நுட்ப உதவிகள் அனைவருக்கும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினி பற்றிச் சிறிதளவே தெரிந்தவர்கள் கூட, தங்களுக்கென்றுச் சொந்தமான வலைப்பதிவினை உடனே உருவாக்கிக் கொள்ள முடியும்.
அநேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்ததொரு வாசகர்வட்டம் அமைந்து விடுவதுண்டு. இக்காரணம் பற்றியே வலைப்பதிவுகள் வாசகர்கள் கருத்துரையாடுதற்கு ஏற்றார்போல் அமைக்கப்படுகின்றன. பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களைப் பின்னூட்டங்களாக (கநநன டியஉம) உடனடியாக அவ் வலைப் பதிவில் பதிவுசெய்து கொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களையும் அடுத்து வரும் வாசகர்கள் பார்க்க வலைப்பதிவுகளில் வாய்ப்புண்டு. தேவையேற்படும் போது பின்னூட்டம், பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் என்று சங்கிலித் தொடர்போல் பதிவு தொடரந்து சென்றுகொண்டே யிருக்கும்.
தகவலின் இடையிடையே படமோ, ஒலியோ, சலனப்படமோ எது தேவையோ அதனை இணைத்துத் தரும் பல்லூடகத் தகவல் முறை வலைப்பதிவுகளில் சாத்தியம். அச்சு ஊடகங்களில் எழுத்தோடு படங்களை மட்டுமே இணைக்க முடியும்.
வலைப்பதிவில் நாம் இதற்குமுன் எழுதிய அனைத்துத் தகவல்களும் தனியே வார வாரியாகவோ, மாத வாரியாகவோ வகைப்படுத்தி சேமிப்பகம் (யுசஉhiஎந) பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர் பழைய தகவல்களையும் இந்தப் பகுதியில் இருந்து படித்துக் கொள்ளலாம்.
வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு:
இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு. ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.
வலைத்தளங்கள்: வலைத்தளங்களை உருவாக்க hவஅட அறிவு ஓரளவேனும் தேவை.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகளை உருவாக்க hவஅட அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (வுநஅpடயவநள) இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.
வலைத்தளங்கள்: வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி எழுதுபவர் ஒருவராகவும், hவஅட கொண்டு அத்தகவல்களை எழுதி உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.
வலைத்தளங்கள்: வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.
வலைத்தளங்கள்: வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னூட்டம் சில தளங்களில் உண்டு.
வலைப்பதிவுகள்: வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னூட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.
மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.
வலைப்பதிவுகள் -சில சிறப்பு வசதிகள்:
வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகு செய்தியோடை வசதியே வலைப்பதிவுத் திரட்டிகளும் வலைப்பதிவர் சமுதாயங்களும் இணைவதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
வலைத்தளங்கள் போல் அல்லாமல் வலைப்பதிவு சேவைகளைப் பல இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்றன. வலைப்பதிவு சேவைகளிலேயே மிகுதியும் விரும்பப்படுவது ப்ளாக்கர்.காம் (டிடழபபநச.உழஅ) சேவைதான். எளிமையான அமைப்புகளுடனும் அதேசமயம் தேவையான பல வசதிகளுடன் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகிள் (பழழபடந.உழஅ) தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த ப்ளாக்கர். காம் மிகுந்த நம்பகத்தன்மை உடையது என்று தமிழ் வலைப்பதிவாளர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.
வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1. வலைப்பதிவுத் தலைப்பு 2. வலைப்பதிவு முகப்பு 3. பதிவின் தலைப்பு 4. பதிவின் உடல்பகுதி 5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் 6. பின்னூட்டங்கள் 7. சேமிப்பகம் 8. இணைப்புகள்
மேலே குறிப்பிடப்பட்ட எட்டுப் பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறுசில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம்பெறுவதுண்டு.
III
ஒருவர் எழுத்தின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற அதிகார மையங்களற்ற வலைப்பதிவுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சி. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. எல்லாத் தரப்பு வாசகர்களுக்கு முன்னாலும் எழுதப்படும் எல்லாப் படைப்புகளும் ஒரே வரிசையில் காட்சிப்படுத்தும் அதிகாரமைய உடைப்பு வலைப்பதிவுகளால் சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி முதலான வலைப்பதிவுத் திரட்டிகள் இப்பணியை எளிதாக்கியிருக்கின்றன.
ஊடக உடைமையாளர், தரப்படுத்துநர் போன்ற அதிகார மையங்களின் இடையீடு இல்லாமல் எழுதப்படுவன எல்லாம் ஒரு நிமிடம் கூடத் தாமதமில்லாமல் மின்னெழுத்தால் அச்சிடப்படும் வாய்ப்பு. பிரபலங்களின் ஆதிக்கங்கள் நொறுங்கி, தலைப்புகளும் உள்ளடக்கங்களுமே ஒரு படைப்பை நாம் படிக்கத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணங்களாகும் ஜனநாயக முறையே வலைப்பதிவுகள். எழுத்தின் தகுதி, தரம் என்ற மாயத்தோற்றங்கள் உடைந்து தகவலும் தகவலின் உடனடித்தன்மையுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
நிறைவாக:
1. ஒருவர் எழுத்தின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற சுதந்திரம்.
2. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப்படல்.
3. எழுத்தின் தகுதி, தரம் என்ற மாயத்தோற்றங்கள் உடைந்து தகவலும் தகவலின் உடனடித்தன்மையுமே முக்கியத்துவம் பெறல்.
4. பல்லூடக தகவல் வழங்கும் முறை, வாசகப் பின்னூட்டங்கள், அதைத் தொடர்ந்த விவாதம் என நீளும் வாய்ப்பு.
5. படைப்பாளிகளின் பிம்பங்கள் உடைந்து வாசகன் -படைப்பாளி சமத்துவம் காணும் எழுத்து ஜனநாயகம்.
வலைப்பதிவுகளின் இத்தகு அதிகாரமைய உடைப்பு ஊடகங்களின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. கணிப்பொறி, இணையம் என்ற அறிவியல் தொழில்நுட்பம் சாதித்த புரட்சி.